அந்த 2 கோடிக்கு தான் இந்த பிரச்சினையா?.. வருமான வரித்துறையின் சோதனைக்கு பதிலளித்த ராஷ்மிகா
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவருக்கென தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, ராஷ்மிகாவின் வீடு கர்நாடக மாநிலம் குடகு விராஜ் பேட்டையில் உள்ளது.
இந்த வீட்டில் வருமான வரி அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி ரொக்க பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை குறித்து கருத்து சொல்லாமல் இருந்த ராஷ்மிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “நான் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக அப்போது தகவல் பரவியது. அந்த செய்திகள்தான் வருமானவரி துறையினர் சோதனைக்கு காரணம். உண்மையில் நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள்.
கதாநாயகனுக்கே அவ்வளவு சம்பளம் தருவது இல்லை. உங்களுக்கு எப்படி தர முடியும் என்பார்கள். நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கி இருப்பது பற்றி பேசுகிறார்கள்.
ஓட்டலில் தங்குவது சிரமமாக இருந்ததால் வீடு வாங்கினேன். என்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் ஆரம்பத்தில் வருத்தம் ஏற்படுத்தின. இப்போது கண்டுகொள்வது இல்லை” என கூறியுள்ளார்.