ராணி எலிசபெத்துக்காக 30 ஆண்டிற்கு முன்பே தயாரான சவப்பெட்டி.. இதுல அப்படியென்ன விஷயம் இருக்கு?
மறைந்த ராணி எலிசபெத் உடலை நல்லடக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சவப்பெட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணி எலிசபெத்
கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த ராணி எலிசபெத், தன்னுடைய 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.
முன்னதாக, ராணி எலிசபெத் இறப்பதற்கு ஒரு சில தினங்கள் முன்பாகவே, அவரது உடல்நிலை சற்று மோசமாக இருந்ததாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Paul Grover / Getty Images
அதிக ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தவர் என்ற பெருமையும் எலிசபெத் வசம் தான். ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.
மேலும், செப்டம்பர் 19ஆம் தேதி ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தற்போது ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

CHIP SOMODEVILLA/GETTY IMAGES
30 ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி
ராணி எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் பெட்டியானது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ராஜ குடும்பத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கான சவப்பெட்டிகள் தயார் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் அரச குடும்பத்தினரை நல்லடக்கம் செய்யும் பழக்கம், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

BEN STANSALL/POOL/AFP VIA GETTY IMAGES
ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் உடல்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்றும், காற்று உள்ளே புகாமல் மூடப்படும் காரணத்தினால் குறைந்தது ஓராண்டு காலம் வரை உடல்கள் கெடாமல் அப்படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக தான், இப்படி ஒரு சவப்பெட்டி தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், ராணி எலிசபெத் இருக்கும் சவப்பெட்டியை 8 பேர்களால் தான் சுமக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

IMAGE: TIM ROOKE/SHUTTERSTOCK