கொரோனாவே நுழையாத கிராமத்தில்.. கருப்பு பூஞ்சையால் ஒருவர் பலி! அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னான்குட்டி(58). இவர், ஒரு விவசாயி..
இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில், இவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையில் இருந்த இவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், பாப்பான்விடுதி கிராமத்தில் கொரோனா பரவல் முதலாவது அலையில் இருந்து ஒருவர் கூட கொரோனாவுக்கு பாதிக்கப்படாமல் இருந்துவந்தனர்.
இதனிடையே, முதல் முதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.