சினிமா பட பாணியில் தற்கொலை: மலையிலிருந்து குதித்த காதலன்! எஸ்கேப் ஆன காதலி பகீர் வாக்குமூலம்
புன்னகை மன்னன் பட பாணியில் கேரளாவில் மலை உச்சியில் இருந்து காதல் ஜோடி விழுந்து தற்கொலை செய்ய முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசனும் ரேகாவும் கதைப்படி மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதில் கதாநாயகன் தப்பித்துக்கொள்ள, கதாநாயகி மட்டும் மலையில் மோதி பலியாகிவிடுவார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம்தான் கேரளாவில் நடந்து உள்ளது.
படத்தில் காதலன் தப்பிக்கும் நிலையில் நிஜத்தில் காதலி தப்பித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் இடுக்கி அருகே உள்ள மரயூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா. இவர் பக்கத்து ஊரான பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் காதலி நிகிலாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்த மலை உச்சிக்கு சென்றுள்ளார்.
நீ இல்லாமல் வாழ விருப்பமில்லை, இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று காதலன் கூறியுள்ளார். ஆனால் காதலி, தற்கொலை எல்லாம் வேண்டாம். வா குடும்பத்திடம் பேசலாம் என்று நிகிலா கூறியுள்ளார்.
தொடர்ந்து காதலன் வற்புறுத்தியதால், அரை மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு முன்பு இருவரும் காணொளி எடுத்து தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் நிகிலா முழு விருப்பம் இன்றியே தற்கொலைக்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதன்பின் மலைக்கு மேல் ஏறி தற்கொலை செய்யும் முன் நாதிர்ஷா, நாம் கீழே விழுந்தால் உயிர் பிழைக்க கூடாது. அதனால் கையை அறுத்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.
ஆனால் இதற்கு நிகிலா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் கட்டாயப்படுத்தி அவரின் கையை நாதிர்ஷா அறுக்க வைத்துள்ளார். இதன் பின் நாதிர்ஷா தனது கையை அறுத்துக்கொண்டார்.
கையில் ரத்தம் வந்ததை பார்த்ததும் நிகிலா.. வேண்டாம் நாம் தற்கொலை செய்ய வேண்டாம். வா மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால் நாதிர்ஷா சொன்னதை கேட்காமல் மலையில் இருந்து அவசரப்பட்டு கீழே விழுந்துவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த நாதிர்ஷா உயிரிழந்த நிலையில், நிகிலா மலையில் இருந்து விழவில்லை. கையில் ரத்தம் சொட்ட சொட்ட இவர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து கையில் வெட்டுப்பட்டதால் ரத்தத்தை இழந்த நிகிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் சீரியசாக இருந்தவர் தற்போது கொஞ்சம் உடல்நிலை சரியாகி உள்ளார்.
தனக்கு தற்கொலை செய்ய தொடக்கத்தில் இருந்தே விரும்பம் இல்லை என்றும், கஷ்டப்பட்டே கடைசியில் மனம் மாறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.