Punjabi Chicken Gravy : சப்பாத்தி, பூரிக்கு பக்காவாக பொருந்தும் பஞ்சாபி சிக்கன் கிரேவி!
Punjabi Chicken Gravy : இந்த வார ஞாயிற்றுக்கிழமை காலை உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்களா?
அப்படியானால், நீங்கள் வழக்கமாகச் செய்யும் சிக்கன் கிரேவியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த முறை ஒரு வித்தியாசமான பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்து பாருங்கள்.

பஞ்சாபி சமையலின் சிறப்பே அதன் மணமும், மசாலாவின் சுவையும், கிரேவியின் அடர்த்தியும் தான். சிக்கனை நன்கு மசாலாக்களுடன் சேர்த்து சமைப்பதால், ஒவ்வொரு துண்டிலும் மசாலாவின் சுவை நன்றாக ஊறியிருக்கும்.
குறிப்பாக, சூடான சப்பாத்தி அல்லது மொறுமொறுப்பான பூரியுடன் இந்த சிக்கன் கிரேவியை சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். அசத்தல் சுவையில் பஞ்சாபி சிக்கன் கிரேவியை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கனை ஊற வைக்க
சிக்கன் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான
அளவு பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
தயிர் – 50 மி.லி
கொத்தமல்லி - சிறிதளவு

கிரேவி செய்ய
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 5
ஏலக்காய் – 2
கருப்பு ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
சீரகம் – 1/2 தே.கரண்டி
மிளகு – 1/4 தே.கரண்டி
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 மேசைக்கரண்டி
தக்காளி – 2 (அரைத்தது)
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
மல்லித் தூள் – 1 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
ஊற வைத்த சிக்கன்
தண்ணீர் – 100 மி.லி
கரம் மசாலா – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
கசூரி மெத்தி – 1 தே.கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தயிர் மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்றாகப் கலந்துவிட்டு, இதை மூடி வைத்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து அரைத்த தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இப்போது ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, மசாலா சிக்கனுடன் நன்றாக கலக்கும் வரை 5–8 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும்.
பின்னர் 100 மில்லி தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறவும். பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் சுமார் 20–30 நிமிடங்கள் சிக்கனை வேகவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு முறை கிளறி, மேலே கசூரி மெத்தி மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி கலந்தால், அவ்வளவுதான் மணமும் சுவையும் நிறைந்த பஞ்சாபி சிக்கன் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |