மதனுக்காக முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல்! ஆடியோவை கேட்டு வழக்கறிஞரை வறுத்தெடுத்த நீதிபதி!
ஆபாச பேச்சின் மூலம் சர்ச்சையில் சிக்கி தலைமறைவான பப்ஜி மதனின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சேலத்தை சேர்ந்த மதன் குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, 'டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்து வந்தார்.
பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியே வந்தார்.
இதனால், அவரின் யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்கள் அதிகமாகி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்தனர். அவரின் யூடியூப் சேனலை பார்க்கும் பலரும் சிறுவர்களே என தெரியவந்தது.
மதனின் ஆபாச பேச்சுகளால் அவர்கள் தடம் மாறிய போயுள்ளனர். இதனால், மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
மேலும், மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே மனைவி கிருத்திகாவை செய்து அவரின் சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதுவரை வெளிவராத மதன் இனிமேல் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முன் ஜாமீன் கோரி மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் வாதாடினார்.
இதையடுத்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள் எனவும், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆடியோவை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சு காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
மேலும், யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக பதிலளித்தார்.
அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார். அதேசமயம் மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, CD-யாகவோ, Pen drive-ஆகவோ தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.