சாமியார் கூறிய அருள்வாக்கு... மனைவி எடுத்த அதிரடி முடிவு! விரக்தியில் சாமியாரை கொலை செய்த கணவர்
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் மனைவியை பிரித்த சாமியாரை குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56), இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி என்ற கோயில் வைத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
இவரது வீட்டின் அருகே திருமலை(38), இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதுடன் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைத்துள்ளார். இதனால் திருமலையின் மனைவி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் திருமலை மனஉளைச்சலில் இருந்துள்ளார். அவரை அருகில் உள்ள சாமியார் ராஜேந்திரனிடம் குறி கேட்க உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அவரிடம் பேசிய பிறகு தனது மனைவி கோபித்துக் கொண்டு செல்ல அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என்று திருமலை நினைத்துக் கொண்டார். தன்னை பற்றி தவறாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய திருமலை, ராஜேந்திரனை ஆத்திரத்தில் கொல்ல முடிவு செய்தார். இதன்படி சாமியார் ராஜேந்திரனை சந்திக்க வந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சென்று திடீரென ராஜேந்திரனின் வயிற்றில் குத்தி உள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே மயங்கினார்.அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் கடந்த ஒரு வாரமாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே திருமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இநிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.