ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பாவின் கணவர் சிக்கியது எப்படி? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
ஆபாச படமெடுத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சிக்கியது எப்படி என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டு இருந்த யாஸ்மின் ரோவா கான் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்தனர். பிடிப்பட்ட கும்பல் சினிமா படவாய்ப்புகள் தேடி அலையும் மாடல் அழகிகளை ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கைதானவர்கள் மீது போலீசார் ஆபாச படங்களை பரப்புதல், பொது இடத்தில் ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இதேபோல், போலீசார் ஆபாச படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.36½ லட்சத்தையும் முடக்கி இருந்தனர்.
இந்நிலையில் ஆபாச படம் எடுத்து, செல்போன் செயலிகளில் பதிவேற்றம் செய்த வழக்கில் பிரபல நடிகை சில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு(45) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால், அவரை கடந்த நாள் இரவு மும்பை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளி என்றும், இதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, தற்போது வெளியான பரபரப்பு தகவலில், பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை அவருக்கு சொந்தமான "ஹாட்சாட்ஸ்" என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து, அந்த படங்களை பார்க்கும் பார்வையாளர்களிடம் இருந்து சந்தா தொகை பெற்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து உள்ளார்.
இதன்பின்னர் அவர் அந்த செல்போன் செயலியை அவரது உறவினர் பிரதீப் பாக்சியின் கென்ரிவின் நிறுவனத்திற்கு விற்றதும் தெரியவந்தது.
மேலும், செல்போன் செயலி நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த ரியான் தோர்பே என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது, மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜ்குந்த்ரா ஆஜர்படுத்தினர்.
இதில் போலீஸ் தரப்பில், ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை செல்போன் செயலியில் பதிவேற்றியதன் மூலம் பணம் சம்பாதித்தது அவரது வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்து உள்ளது. ராஜ்குந்த்ரா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் அவரை போலீஸ் காவலில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிப்ரவரி மாதமே வழக்குப்பதிவு செய்த நிலையில் ராஜ்குந்த்ராவுக்கு சம்மன் அனுப்பி வாக்குமூலம் பதிவு செய்து இருக்க வேண்டும். அதை செய்யாமல் நேரடியாக அவரை கைது செய்து இருப்பது சரியல்ல என்றும் வக்கீல்கள் கூறினர்.
எனினும் 2 தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே ஆகிய இருவருக்கும் 23-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினர்.
இதனிடையே, ராஜ்குந்த்ரா மீது இன்னொரு ஆபாச பட வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்தது நிலுவையில் உள்ளது,.