உங்க சிம் பிளாக் ஆகிடுமாம்! இணைய கொள்ளையர்களின் ட்ரிக்... உஷார் மக்களே
தொழில்நுட்பங்கள் வளர வளர நாம் ஒருபுறம் மகிழ்ச்சியாக காணப்பட்டாலும் மற்றொரு புறம் ஏமாற்று வேலைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றது.
ஆம் மக்களிடம் மிக எளிதாக ஸ்மார்ட் போன்களை வைத்து ஆன்லைன் கொள்ளையர்கள் தங்களது கொள்ளைகளை செய்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் பற்றி முழுதும் அறியாத அம்மக்களிடம் நைச்சியமாக பேசி தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் வாங்கி மிரட்டுகின்றனர். அல்லது தகவல்களின் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து கொள்ளையடிக்கிறார்கள்.
போன் செய்து வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண் என அனைத்தையும் உருவி அதன்மூலம் பணம் பறித்துவந்தனர். தற்போது மக்கள் உஷாராகிவிட்டதால் புது டெக்னிக் ஒன்றை கொள்ளைக் கும்பல் கண்டுபிடித்துள்ளது.
உங்களுக்கு போன் செய்து உங்களின் சிம் கார்டுக்கு தேவையான ஆவணங்கள் குறைவாக இருப்பதாகவும், போதிய ஆவணங்கள் இல்லாததால் உங்களுடைய சிம் கார்டு இன்னும் சில மணி நேரங்களில் முடக்கப்பட்டு விடும் என எதிர்முனையில் அந்தக் குரல் ஒலித்தால் நிச்சயம் அது மோசடி குரல் தான் என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவர்களின் எச்சரிக்கைக்கு நீங்கள் பயந்துவிட்டால், அவர்கள் உருவாக்கிய ஒரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய சொல்லி அதில் உங்களின் தனிப்பட்ட சீக்ரெட் தகவல்களைப் பதிய சொல்வார்கள்.
அந்தத் தகவல்களைக் கொண்டு உங்களை மிரட்டுவார்கள் அல்லது உங்களது வங்கியிலிருந்து பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்.
ஒருவேளை நீங்கள் பயப்படாமல் உங்கள் இஷ்டத்திற்கு உங்கள் மொழியில் பதில் சொன்னால் அந்தக் கொள்ளைக் கும்பல் பயந்து தெறித்து ஓடிவிடும். ஆகவே இவர்களிடமிருந்து உஷாராக இருங்கள் என சைபர் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை. உடனடியாக உங்கள் போன் (வோடாபோன், ஜியோ போன்றவை) நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தகவல் அனுப்பி, டவர் லொக்கேசன் பார்க்க வேண்டும். அதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க முடியும்.
போலி வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவோருக்கு அந்தப் பணம் 5 மணி நேரத்துக்கு பிறகே செல்லும் என்பதால் அதற்குள் பணத்தை மீட்டுவிடலாம். ஆகவே உடனே புகார் கொடுங்கள்.