மொறு மொறு தோசைக்கு சுடச் சுட வெங்காய சட்னி! இனி இப்படி செய்து ருசியுங்கள்
இட்லி அல்லது தோசைக்கு எப்போதும் சட்னி அருமையாக இருக்கும்.
தினமும் தேங்காய் சட்னி செய்து போர் அடித்து இருக்கும்.
இனி வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
- பூண்டு - 1-2 பல் (நறுக்கியது)
- காஷ்மீரி மிளகாய் - 2-3
- நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- புளி - ஒரு சிறிய துண்டு
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
- நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சில நொடிகள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளி சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்ததை சேர்த்து குறைவான தீயில் வைத்து, வேண்டுமானால் சிறிது நீர் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான வெங்காய சட்னி தயார்.