யாழ்ப்பாணத்தின் மர்ம கிணறு பற்றி கேள்விப்பட்டதுண்டா?
யாழ்ப்பாணத்தில் எவ்வளவு சிறப்பு வாய்ந்த இடங்கள் இருக்கின்றதோ அதேபோல மர்மமான இடங்களும் இருக்கின்றன.
புத்தூர் சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ளதுதான் மர்மங்கள் நிரம்பிய கிணறுதான் நிலாவரை.
நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக் கூட இருந்தாலும் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். ந
மது பொக்கிசங்களை கண்டிப்பாக நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். எங்களுடைய வருங்கால சந்ததிகளிற்கு அது தெரியவேண்டுமல்லவா.
ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.
கிணற்றுக்குள் 182 அடி சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது.
ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது.
இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது.
வண்டிகளின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.
ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன.
இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என கேள்விப்பட்டதுண்டு.
ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன.
அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன.
கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும்.
அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.
நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சின்போதும் மழைக்காலத்தின்போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்கவிடயம்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அங்கு காணப்படுகின்றது.
யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் காணப்படும் சிவன் கோவில் பற்ரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். , தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் காணப்படுகின்றது.
அதோடு இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை சென்றபோது , வானரப்படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்றும் புராணவரலாற்றுக்கதைகள் கூறுகின்றன.
எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் சொத்தாகும்.
நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றன.
ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.