வீடே மணமணக்கும் காளான் பிரியாணி! இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்க
காளான் பிரியாணி செய்வது மிகவும் ஈஸி.
வீடே மணமணக்கும் காளான் பிரியாணியை இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி - 1 கப்
- காளான் - 200 கிராம்
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- தேங்காய் பால் - 1/2 கப்
- தண்ணீர் - 1 1/2 கப்
- தயிர் - 1/2 கப்
- தக்காளி - 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- புதினா - 1/4 கப்
- கொத்தமல்லி - 1/4 கப்

தாளிப்பதற்கு...
- நெய் - 3 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1/2 இன்ச்
- கிராம்பு - 2
- பிரியாணி இலை - 1
- ஏலக்காய் - 1
- அன்னாசிப்பூ - 1
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய பாசுமதி அரிசியில் 1 1/2 கப் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 கப் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் காளான், தயிர், நறுக்கிய தக்காளி, பாதி வதக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீருடன் சேர்த்து கிளற வேண்டும்.
அதன் பின் அதில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கிளறி, கொதிக்க விட வேண்டும்.
உலை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் 15 நிமிடம் அப்படியே தனியாக வைக்க வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, அதில் மீதமுள்ள வதக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி மென்மையாக ஒருமுறை கிளறினால், காளான் பிரியாணி தயார்.