இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட தாய் தந்தை... மகன் நிகழ்த்திய கோர சம்பவம்
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பணம் கேட்டு பெற்ற தாய் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூச்செட்டி அள்ளி கிராமத்தை சேர்ந்த பெரமன் என்பவரது மகன் ராமச்சந்திரன் (வயது 65). இவரது மனைவி சின்னராஜி(60).
இவர்களுக்கு மகன் ராமசாமி (40) மகள் சுமதி(35) ஆகியோர் உள்ளனர். இதில் மகன் ராமசாமி பூச்செட்டி கிராமத்தில் கடை வைத்து இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வருகின்றார். மகள் சுமதி பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் பகுதியில் திருமணமாகி கணவர் வீட்டில் உள்ளார். ராமச்சந்திரன் மற்றும் சின்னராஜி இருவரும் பூச்செட்டியில் தனியாக வசித்து வருகின்றனர். பக்கத்தில் உள்ள வீட்டில் மகன் ராமசாமி, தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தாய் சின்னராஜி பெயரில் இருந்த இடத்தில் ஒரு பகுதியை மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ளார். இதில் மகள் அந்த நிலத்தில் வீடு கட்டிய நிலையில், மகனும் வீடு கட்டுவதற்கு தாய், தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராமசாமி வாக்குவாதத்தில் இறங்கியதோடு, ஆத்திரம் அடைந்து தனது கடையில் இருந்த இரும்பு கம்பியால், தாய் சின்னராஜியைத் தாக்கினார். இதில் மண்டை உடைந்து சின்னராஜி ரத்த வெள்ளத்தில் தனது வீட்டு வாசலில் சாய்ந்தார். அவரது அலறல் கேட்டு தடுக்க வந்த தந்தை ராமச்சந்திரனையும் அதே கம்பியால் அடித்துள்ளார்.
பின்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் இருவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துள்ளனர்.
பெற்றோர்களை கொலை செய்துவிட்டு தப்பிய ராமசாமி பின்பு பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.