தாயின் சடலத்தை பாதாள அறையில் வைத்திருந்த மகன்: பின்னணியில் பகீர் காரணம்
தாயின் பென்சன் பணத்திற்கு ஆசைப்பட்ட மகன், தாய் இறந்தும் அவரது சடலத்தினை பாதாள அறையில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார்.
ஆனால் இவரது 66 வயதான மகன், தாயின் உடலை நல்லடக்கம் செய்யாமல், வீட்டின் பாதாள அறையில் ஓராண்டிற்கு மேலாக வைத்து பாதுகாத்துள்ளார்.
துர்நாற்றம் வராமல் இருப்பதற்கு தாயின் உடலை ஐஸ்கட்டிகள், பேண்டேஜ்களை வைத்து பாதுகாத்ததோடு, கடந்த ஓராண்டு காலத்தில் அவரது ஓய்வூதியத்தொகையாக 50 ஆயிரம் டொலருக்கு (சுமார் ரூ.36 லட்சம்) மேற்பட்ட தொகையை பெற்றுள்ளார்.
புதிதாக அந்தப் பகுதியில் வேலையில் சேர்ந்த தபால்காரர், ஓய்வூதியம் பெறும் அந்த மூதாட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியதால் தற்போது விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இறந்து போன தாயின் உடலை பாதாள அறையில் வைத்துவிட்டு, அவரது ஓய்வூதியத்தை மகன் வாங்கி வந்ததும் அம்பலமானது. இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.