தினமும் செல்போன் டிவி நோ! புதிய முயற்சியை கையில் எடுத்த கிராமம்; குவியும் வாழ்த்துக்கள்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போன், சமூக ஊடகங்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதிலேயே மூழ்கியுள்ளனர் பலரும். அந்த வகையில், சமூக ஊடகங்களில் இருந்து விடுபட ஒரு கிராமம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ள மொஹித்யாஞ்சே வட்கான் கிராமம் மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களிலிருந்து விடுபட தினமும் 1.30 மணி நேரம் ஒதுக்குவதாகவும், அதனைத் தவறாமல் கடைப்பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி தினமும் மாலை 7 மணிக்கு ஒரு சைரன் ஒலி ஒலிக்கிறது. இதன்பின் கிராமமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற கேஜெட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடுகின்றனர்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பத்தையும் நிறுத்திவிட்டு, புத்தகங்கள் படிப்பது மற்றும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது என செயல்களில் ஈடுபட தொடங்குகின்றனர்.
பின்னர், இரண்டாவது அலாரம் 8.30 மணிக்கு ஒலிக்கிறது. அதன்பிறகு தங்களின் மொபைல் போன்கள், கேஜெட்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த யோசனையை மொஹித்யாஞ்சே வட்கான் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் விஜய் மோஹித் செயல்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவானது. பள்ளி படிக்கும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புக்காக பல மணிநேரம் மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர்.
அதேப்போல் பெற்றோரின் தொலைக்காட்சி பார்க்கும் நேரம் நீண்டது. வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது, ஆசிரியர்கள் குழந்தைகள் சோம்பேறிகளாகிவிட்டதை உணர்ந்தனர்.
இதனால் படிக்கவும், எழுதவும், விரும்பவில்லை மற்றும் பள்ளி நேரத்திற்கு முன்னும் பின்னும் பெரும்பாலும் மொபைல் போன்களில் மூழ்கியிருந்தனர்.
கிராம மக்களின் வீடுகளில் தனிப் படிப்பு அறைகள் இல்லை. எனவே இதனால் தான் நான் டிஜிட்டல் டீடாக்ஸ் யோசனையை முன்வைத்தேன்” என்று அவர் கூறினார்.
மேலும், இம்முயற்சி செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது, என மோஹித் விளக்கினார்.