நாளை மகாளய அமாவாசை: பெண்கள் செய்யக்கூடாத தவறுகள்! தோஷம் ஏற்படும் ஜாக்கிரதை
நாளை மாவளய அமாவாசை. அமாவாசையில் முன்னொர் வழிபாடு என்பது மிக முக்கியமானது என்கிறது சாஸ்திரம்.
மகாளய பட்ச அமாவாசை வருடத்தில் வரக்கூடிய அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை, புரட்டாசி மாத அமாவாசை அதாவது மாவளய அமாவாசை மூன்றும் சிறப்பானது.
அமாவாசை தர்ப்பணம்
அமாவாசை நாளன்று நமது முன்னோர்களை மனதில் நினைத்து ஆற்றிலோ புனித நதி நீர் இடங்களிலோ எள்ளு, தண்ணீரும் தர்ப்பணம் செய்வது வழக்கம். அப்படி செய்தால் நமது முன்னோர்களின் பசியும் தாகமும் அடங்கும் என்று இந்து மதங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த மகாளய அமாவாசை பித்ருக்கள் நேரடியாக வந்து வழிபாட்டு முறையை பார்ப்பதால் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. நாளை மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் முறை குறித்து பார்க்கலாம்.
சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்று வலது கையில் எள் எடுத்து தூய பாத்திரத்தில் நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும்.
இதை கொண்டு சென்று நீர் நிலைகள் இருக்கும் இடங்களில் குளங்களில் விடலாம்.
பித்ருக்களுக்கு பசியும் தாகமும் இருக்கு. அதை தீர்க்கவே இந்த தர்ப்பணம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினத்தில் அகத்திக்கீரையை பசுவுக்கு கொடுப்பதும் ஐதிகம்.
பெண்கள் விரதம் இருக்கலாமா?
திருமணமான பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்க கூடாது. குறிப்பாக அவர் கணவர் இருந்தால் கண்டிப்பாக விரதம் கூடாது.
அந்த பெண்ணுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தால் அவர்கள் தான் அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அப்பெண்ணுக்கு சகோதரர்கள் யாரும் இல்லாத நிலையில் தாய் மட்டும் இருந்தால் அவர் விரதம் இருக்கலாம். தர்ப்பணம் கொடுக்கலாம். அதே போன்று அப்பா இருந்து அம்மா இல்லாத நிலையில் அப்பா விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
அப்பெண்ணுக்கு யாரும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் இருவரும் இல்லை. உடன் பிறந்தவர்களும் இல்லை என்றால் அப்பெண் விரதம் இருக்க கூடாது. ஆனால் கோயிலுக்கு சென்று தானம் செய்யலாம்.
ஆண்கள் விரதம் இருப்பது அவசியம்
ஆண்கள் தாய் தந்தை இருக்கும் போது இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை ஆனால் தாய் அல்லது தந்தை ஒருவர் இல்லையென்றாலும் இருவரும் இல்லையென்றாலும் இந்த அமாவாசை விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
எவற்றை தானம் கொடுக்கலாம்?
இந்த மகாளய பட்ச நாளில் முன்னோர்களை நினைத்து தானம் செய்யலாம். அவர்கள் நினைவாக வஸ்திர தானம் செய்யலாம். குடை வழங்கலாம். போர்வை, காலணி, சால்வை போன்றவை அளிக்கலாம் இயன்றால் முடிந்தளவு 10 பேருக்கு அன்னதானம் செய்யலாம்.
சற்று வசதி படைத்தவர்கள் கோ தானம் செய்யலாம். மற்ற அமாவாசை நாளில் தானம் கொடுக்க முடியாத சூழல் இருந்தாலும் இந்த பெரிய அமாவாசையில் தானம் கொடுங்கள்.
என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
மகாளய அமாவாசை நாளில் வீடு வாசலை சுத்தம் செய்து முன்னோர்களை வரவேற்க வேண்டும். மறந்தும் வாசலில் கோலம் போடக்கூடாது.
வீட்டில் சைவ உணவுகளை சமைத்து நம்முடைய முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்களை வைத்து படைத்து காகத்திற்கு உணவு வைத்து விட்டு நாம் சாப்பிட வேண்டும்.
மறக்காமல் சிலருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.