மாணவி சுவேதா கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... பரபரப்பு வாக்குமூலம் அளித்த காதலன்!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது.
சென்னை, தாம்பரம் ரயில் நிலையம் வாயில் அருகே கல்லூரி மாணவி சுவேதாயை ராமு என்ற இளைஞர் கத்தியால் குத்தி உள்ளார். அதன் பின்னர் அந்த இளைஞர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
இதனையடுத்து, இருவரையும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தினாரா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு ரயில் பயணத்தின் மூலம் எங்கள் காதல் மலர்ந்தது. இருவரும் மொபைல் எண்ணை பரிமாறிக்கொண்டோம்.
அதன்பின், இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டு வந்தோம், இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்து, பல இடங்களில் சுற்றி வந்தோம். 2 ஆண்டுகள் காதலித்தோம். என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து வந்த நான், கடந்த ஆண்டு படிப்பை முடித்து, மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன்.
சுவேதாவும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக பட்டயபடிப்பில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த பின் இருந்து, சில மாதங்களாக என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். பின் சமீபத்தில் நான், அவரை நேரில் அழைத்து பேசியபோது, சுவேதாவின் செல்போனை ஆய்வு செய்தேன்.
அதில் ஆண் நண்பர் ஒருவரின் எண்ணை, பெண் பெயரில் பதிவு செய்து இருந்தார். அந்த எண்ணை தொடர்புகொண்டு நான் பேசியபோது, அந்த வாலிபர் சுவேதாவும், நானும், நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். நீங்கள் நினைப்பது போல் எங்களுக்குள் ஒன்றுமில்லை என்றார்.
மேலும், சுவேதாவிடம் நான், இதுபற்றி கேட்டபோது என்னிடம் அவர் சண்டையிட்டார். நான், பலமுறை எடுத்துக்கூறியும் அவர் கேட்காமல் இவ்வளவு கேவலமான ஆளாக இருக்கிறாய்? என கூறி என்னைவிட்டு விலகிச் செல்ல முயன்றார். நான் எவ்வளவு முறை முயன்றபோதும் சுவேதா என்னை ஏற்க மறுத்தார். சரி இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறினார்.
அதற்கு நானும் சம்மதித்தேன். அதன்படி தாம்பரம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு வரச் சொல்லி அங்குபேசிக்கொள்வோம் என கூறினேன். சுவேதாவும் சம்மதித்து, தோழி ஒருவருடன் அங்கு வந்தார். நாங்கள் இருவரும் பேசியபோது, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
2 ஆண்டுகளாக காதலித்து விட்டு, தற்போது விலகிச்செல்லும்படி கூறுகிறாயே. என்னை ஏற்றுக்கொள் என அவரிடம் வற்புறுத்தினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான், தயாராக கொண்டு சென்றிருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தேன்.
பின்னர் நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக கழுத்தை அறுத்து கொண்டேன் என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும், சுவேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம், கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டு உள்ள வார்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.