தொடரும் கனமழை நிலச்சரிவு... கேரளாவில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
இதனால், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும்வெள்ளக்காடாக மாறியுள்ளன.
மேலும், பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனிடையே கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களின் உயிர்களையும் காவு வாங்கி வருகின்றன.
அந்த வகையில் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. அவற்றில் வசித்து வந்த பலரும் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இதில் நேற்று காலை வரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும், 3 பேரின் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இப்படி மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்று 23ஆக அதிகரித்தது.
இன்னும் 20-க்கு மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை தேடும்பணி நடந்து வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
மாநிலத்தில் பல அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், 9 அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது.