நீரிழிவை அடித்து விரட்டும் மாப்பிள்ளை சம்பா அரிசி வெஜிடபிள் கஞ்சி!
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
இன்று இந்த அரிசியுடன் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாப்பிள்ளை சம்பா அரிசி - ஒரு கப்
- முட்டைகோஸ் - கால் கிலோ
- முள்ளங்கி, தக்காளி- ஒன்று
- பெரிய வெங்காயம்- ஒன்று
- பச்சை மிளகாய்- ஒன்று
- எலுமிச்சம்பழம் - ஒன்று
- இஞ்சித் துருவல் - சிறிதளவு
- கொத்தமல்லி - அரை கட்டு
- புதினா - கால் கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
- பூண்டு பல் - சிறிதளவு
- எண்ணெய் - 4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முட்டைகோஸ், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு அதில் வெந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
இப்போது இதமான, மிகவும் ருசியான, சத்தான மாப்பிள்ளை சம்பா அரிசி வெஜிடபிள் கஞ்சி தயார்.