ஐபிஎல் 2022; மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு போகாத வீரர்கள் யார்? சின்ன தலைக்கு வந்த சோதனை!
ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான தொடரின் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதனிடையே இந்த மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிசான் போன்ற இந்திய வீரர்களும் டேவிட் வார்னர் போன்ற சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் குறைவாக எடுக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் யார் எனவும் பார்ப்போம்.
சுரேஷ் ரெய்னா
சென்னை அணியில் சின்ன தல என அன்போடு அழைக்கப்பட்டவர் தான் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வருடங்களாக அபாரமாக செயல்பட்டு அந்த அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக சுரேஷ் ரெய்னா வலம்வந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் குவிக்க தடுமாறி வரும் இவர் கடந்த சீசனில் 12 போட்டிகளில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து படுமோசமான பார்மில் உள்ளார்.
ஐபிஎல் 2022 தொடருக்கான அணியில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. 35 வயதான ரெய்னா ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒப்பந்தமாவது சந்தேகமாகும். இருப்பினும் இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை எடுத்துள்ளார்.
புவனேஸ்வர் குமார்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாரும் கடந்த சில வருடங்களாகவே மோசமான பார்மில் உள்ளார்.
இந்திய அணியை பொறுத்த வரையில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ரன்களை வாரி வழங்கி வருகிறார். ஆனால் ஐபிஎல் பொறுத்தவரை ஓரளவு ரன்களை கட்டுப்படுத்துகிறார்.
மோசமான பார்மின் காரணத்தாலே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் டி20 அணியில் இடம்பிடித்த புவி நல்ல பார்முக்கு வரவேண்டும். அதற்கு முன்னதாகவே ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால், நல்ல தொகைக்கு போவாரா என்பது சந்தேகமே.
ரகானே
இந்தியாவின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், டெஸ்ட் தொடரின் துணை கேப்டனாகவும் வலம் வந்தவர் தான் அஜிங்கிய ரகானே. ஐபிஎல் தொடரில் ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டராக வலம் வந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் அதன்பின் 2020 சீசன் முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
பின்னர், கடந்த சில வருடங்களில் கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக செயல்பத்த தவறியதால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.
எனவே அனைத்து விதமான போட்டிகளிலும் தடுமாறும் இவர் ஐபிஎல் பெரிய தொகைக்கு போவதும் கடினம். பழைய பார்முக்கு மீண்டு வந்தால் மட்டுமே இவர் எதிர்காலத்தில் அணியில் இடம்பிடிக்க முடியும்.
இவர்களை தொடர்ந்து பல இந்திய முன்னாள் வீரர்களும் பெரிய அளவில் ஏலம் போவது கடினம் எனவும், இந்த ஐபிஎல் தொடரை பொறுத்த வரை இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்பதே எதிர்பார்க்கப்படுகிறது.