திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீரஜ் சோப்ரா! நடந்தது என்ன?
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா.இந்தியாவிற்கு இவர் தங்கம் பதக்கம் பெற்று தந்து சாதனை படைத்ததிலிருந்து பல்வேறு தரப்பினர் இவரை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின்னர் கடந்த வாரம் திங்கட்கிழமை இந்தியா திரும்பினார் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ராவை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் அனைத்திலும் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் நீரஜ். இந்திய பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவை நிகழ்ச்சியில் பாராட்டினார்.
இந்நிலையில், தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த நீரஜ் சோப்ராவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாம கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார் நீரஜ். அவரை பரிசோததித்த மருத்துவர்கள் அவருக்கு உடலில் வெப்பம் 103 டிகிரி வரை சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதியானது.
இது குறித்து நீரஜ் சோப்ராவின் தாயார் கூறுகையில், “நாங்கள் நீரஜ்ஜுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க இருந்தோம். அவருடைய தங்கப் பதக்கத்தை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய உள்ளோம். அவருடைய வருகையை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
அதன்படி இன்று காலை டெல்லியிலிருந்து ஹரியானாவிற்கு காரில் வந்தார் நீரஜ். அப்போது வரும் வழியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு விழாவின்போதே அவருக்கு காய்ச்சல் மிக அதிகமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
