வீட்டில் உள்ள கருவாடு துர்நாற்றம் வீசாமல் இருக்க உதவும் கறிவேப்பிலை: எப்படி பயன்படுத்துவது?
கருவாடு என்பது உப்பு தடவப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கும்.
கருவாடு உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை மிகச் செறிவாக வழங்கும் ஒரு பாரம்பரிய உணவாகும்.
இதை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வது எலும்புகளை பலப்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

இந்நிலையில், கருவாட்டை வீட்டில் வாங்கி வைத்தால் அதன் வாசனை வீடு முழுவதும் பரவிவிடும் என்பதால் பலரும் கருவாட்டை வாங்கி வீட்டில் சேமித்துவைக்க தயங்குவார்கள்.
ஆனால் கறிவேப்பிலையை பயன்படுத்தி கருவாட்டை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
அந்தவகையில், வீட்டில் உள்ள கருவாடு கெட்டுப்போகாமலும், துர்நாற்றம் வீசாமலும் இருக்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள்
கறிவேப்பிலையில் இயற்கையாகவே பூச்சிகள் மற்றும் புழுக்களை விரட்டும் தன்மை உள்ளது.
மேலும், இதில் உள்ள சில இயற்கை சேர்மங்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகின்றன.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் உணவின் தரத்தை பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்படி பயன்படுத்துவது?
கருவாட்டை சேமித்து வைக்கும் டப்பா அல்லது பாத்திரம் சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
கருவாட்டுடன் வைக்கப்படும் கறிவேப்பிலை புதியதாகவும், பூச்சித் தாக்குதல் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
பயன்படுத்துவதற்கு முன் கறிவேப்பிலையை நன்றாக கழுவி, சுத்தமான துணி மூலம் முழுமையாக உலர்த்த வேண்டும்
பாத்திரத்தின் அடியில் சிறிதளவு கறிவேப்பிலையை ஒரு அடுக்காக போடுங்கள். அதற்கு மேல் கருவாட்டை வைக்கவும்.
பின்னர் மீண்டும் கறிவேப்பிலை, கருவாடு என அடுக்கடுக்காக வைத்து சேமிக்கலாம்.
கறிவேப்பிலையின் இயற்கையான மணம் கருவாட்டின் வாசனையை குறைக்க உதவும். மேலும், கருவாட்டை பாதுகாக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலை காய்ந்து போனால், அதை அகற்றி புதிய கறிவேப்பிலையை மாற்றி வைக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை
கருவாட்டை எப்போதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைத்து வெளிச்சம் குறைவாகவும், ஈரப்பதம் இல்லாத இடத்திலும் வைக்க வேண்டும்.
கருவாட்டை நீண்ட நாட்கள் வைத்திருந்தால், அவ்வப்போது அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டும்.
கருவாட்டின் இயல்பான வாசனையைத் தவிர வேறு கெட்ட துர்நாற்றம் வந்தால் அது கெட்டுப்போயிருக்கலாம்.
கருவாட்டின் இயல்பான நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
கருவாடு கொழகொழப்பாக அல்லது வழவழப்பாக மாறியிருந்தால் அதை சாப்பிடக்கூடாது.
மேலும், கருவாட்டின் சுவையில் கசப்பு அல்லது அசாதாரண மாற்றம் இருந்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.