பெண்களின் ஆரோக்கியத்தை காக்கும் கும்மாயம் : இவ்வளவு நன்மைகள் இருக்கா!
நமது முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், இயற்கையோடு இணைந்த பழக்கவழக்கங்களும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
அவர்கள் உணவுகளை வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடலின் தேவைகளைப் புரிந்து கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினர்.

அந்த வகையில், பெண்களின் உடல் நலனை மேம்படுத்தும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கும்மாயம் பிரபல்யமாக காணப்படுகின்றது.
குறிப்பாக பெண் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியை வலுப்படுத்தவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் வலியை குறைக்க உதவும் வகையிலும், இந்த சத்துமிக்கஇனிப்பு உணவு பழங்காலத்தில் அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

மேலும், பெண் பிள்ளைகள் பருவமடையும் காலத்திலும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், சத்துத் தேவைகளுக்கும் உதவும் வகையில் கும்மாயம் செய்து கொடுக்கும் வழக்கம் நமது முன்னோர்களிடையே காணப்பட்டது.
இதில் உடலுக்கு தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், வளரும் பருவத்தில் உள்ள பெண்களுக்கு இது ஒரு சிறந்த பாரம்பரிய உணவாக விளங்குகிறது. கும்மாயம் என்ற சொல்லுக்கு "குழையச் சமைத்த பருப்பு" என்று பொருள்.
இது உளுந்து, பாசிப்பருப்பு மாவு, நெய், பனங்கருப்பட்டி போன்ற இயற்கையான பொருட்களை சேர்த்து மெதுவாக வேகவைத்து தயாரிக்கப்படும் சுவையான மற்றும் சத்தான இனிப்பு பலகாரமாகும்.

இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு வலிமையையும், தேவையான சக்தியையும் வழங்கக்கூடியவை. இந்த கும்மாயத்தை இன்றைய தலைமுறையினரும் அறிந்து பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.
பெண் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இந்த சத்துமிக்க கும்மாயத்தை வீட்டிலேயே எளிமையான முறையில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வறுத்து பொடி செய்வதற்கு
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 3
கும்மாயம் செய்வதற்கு
பொடித்த வெல்லம் – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
அரைத்த மாவு – 1 கப்
நெய் – 1/2 கப்

எண்ணெய்க்கும் அப்பால்: மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலானது உரத்தில் தொடங்கி உணவை அடைந்து ஃபாரெக்ஸ் வரையில் எவ்வாறு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.
அதே பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து, நல்ல வாசனை வரும் வரை வறுத்து அதையும் தனியாக எடுத்து ஆற வைக்கவும். பிறகு அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு பொரியும் வரை வறுக்க வேண்டும்.

அதில் ஏலக்காயையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும், வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். சலித்த மாவில் இருந்து 1 கப் மாவை எடுத்து ஒரு வாணலியில் சேர்க்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் முழுவதும் கரையும் வரை சூடாக்கவும்.
வெல்லம் கரைந்ததும் இறக்கி சிறிது ஆற விடவும். பின்னர் அதை வடிகட்டி மாவுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அடுப்பில் வைத்து, தொடர்ந்து கிளறிக் கொண்டே வேகவைக்கவும்.

மாவு கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கிளறவும். கலவை நன்கு திரண்டு அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவு தான் பாரம்பரிய முறையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கும்மாயம் தயார். குறிப்பாக மாதவிடால் காலத்தில் பெண்கள் இதனை சாப்பிடுவதால் வலி குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |