ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க
கிராமத்து ஸ்டைல் காரசாரமான மண்சட்டி முரல் மீன் சமைப்பது எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீன்களில் பலவகைகள் உள்ள நிலையில், கடல்வகை உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தினை அளிக்கின்றது.
பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலையில் இதில் முரல் மீனை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். ஏனெனில் மருத்துவ குணங்கள் மட்டுமின்றி சுவையில் இவை அட்டகாசமாகவே இருக்கும்..

தேவையான பொருட்கள்
முரல்மீன் - 1 கிலோ
தக்காளி - 4
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
வெள்ளை பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3 (இடித்து சேர்க்கவும்)
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முதலில் முரல்மீன்களின் செதில்களை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பின்பு புளியை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவுமு். இதனுடன் தக்காளியையும் பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து, இதனுடன் சீரகம், சோம்பு, சின்னவெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய், வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு இதனுடன் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.
இதனுடன் தயாரித்து வைத்த புளிகரைசல் மற்றும் தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இதில் மீன் துண்டுகளை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்தால் ஊரே மணக்கும் மீன் குழம்பு தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |