காரசார நண்டு குழம்பு... பாரம்பரிய சுவையில் இப்படி செய்து பாருங்க
காரசாரமான நண்டு குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடல் உணவுகளில் தனித்துவமான சுவையும், மணமும் கொண்டது நண்டு ஆகும். மண் சட்டியில் சரியான மசாலா கலவையுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பலமடங்கு அதிகரிக்கும்.
சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை வதக்கி அரைத்து தயாரிக்கும் இந்த காரசாரமான நண்டு குழம்பு சுவை அனைவருக்கும் பிடிக்கும்.
எளிய முறையில் அனைவருக்கும் பிடித்த நண்டு குழம்பை பாரம்பரிய முறைப்படி எவ்வாறு சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
வெள்ளை பூண்டு - 20 பல்
தக்காளி - 2
இஞ்சி - சிறிதளவு
கல் உப்பு - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் அதில் எண்ணெய் சேர்த்து சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பூண்டு மற்றும் இஞ்சி, தக்காளி இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்பு மண்சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், சோம்பு, மேலும் 20 சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, இதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்.
பின்பு இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நண்டையும் அதனுடன் சேர்த்து வேக விடவும். கடைசியாக மிளகுதூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் காரசாரமான நண்டு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |