ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி வறுவல்... எப்படி செய்றதுனு தெரியுமா?
உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியை அடிக்கடி செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் நாட்டுக்கோழி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவலை செய்யுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
மேலும் இது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த ரெசிபியை செய்யலாம்.
ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வறுவலுக்கு...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
நாட்டுக்கோழி - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 லிட்டர்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
முதலில் நாட்டுக்கோழியை நன்றாக கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும். வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து வறுத்து குளிர வைத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20-25 நிமிடம் நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி விடவும்.
25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
சிக்கனில் நீர் வற்றி வரும் போது அதனை இறக்கி வைத்துவிட்டு, தாளிப்பதற்கு கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து இறக்கினால் ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |