வீடே மணக்கும் வகையில் சுத்தமான நெய் எப்படி தயார் செய்யலாம்? ஈஸியான டிப்ஸ் இதோ
தற்போது கடைகளில் விற்கப்படும் அனைத்து பொருட்களிலும் கலப்படம் என்பது இல்லாமல் இருப்பதே இல்லை. அந்த அளவிற்கு சமையல் பொருட்கள், சாப்பிடும் உணவுப் பொருட்கள் என அனைத்திலும் கலப்படமாகவே இருக்கின்றது.
விலை அதிகமான பொருட்களில் லாபத்தினை அதிகமாக எதிர்பார்க்கும் சிலர் அதிலும் கலப்படத்தினை கொண்டு வருகின்றனர். இதில் நெய்யை முக்கியமாக கூறலாம்.
விலை அதிகமாக இருக்கும் நெய்யினை கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கான அருமையான விளக்கத்துடன் காணொளி இதோ...
முதலில் நாம் வாங்கும் பசும்பாலில் தினமும் காய்ச்சி முடித்த பின்பு அதில் மேலே படரும் ஆடையினை ஒரு டப்பாவில் ஒரு வாரம் அளவிற்கு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை பிரீசரில் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்தால் இது பூஞ்சை பிடித்து வீணாகிவிடும்.
நாம் நெய் உருக்கும் நாளில் பிரீசரில் இருந்து பிரிட்ஜிற்கு மாற்றி வைத்துவிட்டால், அதன் ஐஸ் கட்டி தன்மை இல்லாமல் சாதாரணமான பதத்திற்கு வந்துவிடும்.
பின்பு மிக்ஸியில் இந்த ஆடையினை போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து சில ஐஸ்கட்டிகளையும் அந்த மிக்ஸி ஜாருக்குள் போட்டு குளிர்ந்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அறைக்க வேண்டும் அல்லது மத்தினால் நன்கு கடைந்து எடுக்கவும்.
இவ்வாறு செய்யும் தருணத்தில் ஒரு கட்டத்தில் வெண்ணெய் திரண்டு மேலே வரும். இதனை எடுத்து குளிர்ந்த நீரில் இரண்டுமுறை கழுவிவிட்டு, பின்பு நெய் உருக்கும் சட்டியில் வெண்ணெய்யை போட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடு செய்ய வேண்டும்.
வெண்ணெய் முழுவதும் உருகி ஒரு 15 நிமிடத்தில் நுரையாக வந்து அடங்கி நெய் வாசனை வீடுமுழுவதும் மணக்க ஆரம்பித்து விடும். அதிலிருந்தே நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சுத்தமான நெய் தயார் என்று... பின்பு நெய்யை வடிகட்டி பாத்திரத்தில் வைத்து அவ்வப்போது தேவைக்கு கைபடாமல் ஸ்பூன் மூலமாக எடுத்து பயன்படுத்தவும்.