தேவலோகப் பெண்கள் ஆண்களின் கனவில் வந்தால் என்ன நடக்கும்! எந்த கனவு ஆபத்து தெரியுமா?
கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும். இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும்; மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும், விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வாறு வரும் கனவுகளைப் பற்றி நமது முன்னோர் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதித் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து அபூர்வமான தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம். அதிர்ஷ்டம் தரும் கனவு! அரசர் (தற்போது ஜனாதிபதி, பிரதமர்) போன்ற பெரும்பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண் மேற்படி கனவைக் கண்டால், அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆடவன், அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.
தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். திருமணமாகாத மகளிர் கண்டால், விரைவில் திருமணம் நிகழும். மணமான மங்கையர் கண்டால், பொருள் வரவு உண்டு. அழகு இல்லாத பெண் ஒருத்தியை, மணமாகாத ஓர் ஆடவன் கனவில் கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். மிகவும் அழகான பெண் மனைவியாவாள். விந்தையான மனிதர் அல்லது நூதனப் பொருட்கள் கனவில் வந்தால், வரும் தீமையைச் சுட்டிக்காட்டும்.
நம்பிக்கை மோசடி – ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு கண்டால், அவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டையில், பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இல்லை எனலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து நண்பர்களாக மாறுவார்கள். தான் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை உருவாகும்.
புதிய நண்பர்கள் உண்டாவர், புகழ் பெருகும். தான் அடிபட்டு காயமடைந்ததாகக் கனவு கண்டால், பொருள் அபிவிருத்தி ஏற்படக்கூடும் எனலாம். ஆனால், கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நல்லதல்ல; பழி ஏதேனும் வந்து சேரும். வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு காணின் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும். தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால், பலன் நேர்மாறாக நிகழும்.
அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். பிறர் அபாயத்தில் சிக்கியிருப்பதுபோல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும். அரிசியைக் கனவில் கண்டாலோ, சந்தையில் வாங்கி வருவதுபோல் கனவு கண்டாலோ செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும், லாபம் அதிகரிக்கும். கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது சிலாக்கியம் என்று கூறுவதற்கில்லை.
பருவ வயதில் உள்ள ஓர் இளைஞனின் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், பெரும் ஏமாற்றங்களுக்கு அவன் ஆளாக வேண்டியிருக்கும். அவனுடைய தன்மானத்துக்கு இழுக்கும் அபவாதமும் சூழும்.
மணமாகாத மங்கை ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னத்தைக் கண்டால், உடனடியாக ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடும். ஆனால், வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.