எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க
சுண்டைக்காய் கசப்பாக இருந்தாலும் அதன் நன்மைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து செரிந்து காணப்படுகின்றது.
100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் காணப்படுகின்றது. செரிமானமின்மை, வயிற்று மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் இருக்கின்றன எனில் அதற்கு சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும்.
கால்சியம் சத்து சுண்டைக்காயில் அதிகமாக கிடைக்கிறது. எனவே எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இது உங்களுக்கு எதிர்கலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும். சுண்டைக்காய் வத்தலாக சாப்பிடுவதைவிட அதை பச்சையாக குழம்பு வைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெற முடியும்.
குறிப்பாக சுண்டைக்காயை வைத்து சாம்பார், காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் அதன் நன்மைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. இவ்வளவு மருத்து குணம் நிறைந்த சுண்டைக்காயில் எவ்வாறு நாவூரும் சுவையில் சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வதக்குவதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 1/4 தே.கரண்டி
சுண்டைக்காய் - 1 கைப்பிடி
வரமிளகாய் - 4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
கல் உப்பு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/4தே.கரண்டி
வறுப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1/2 தே.கரண்டி
கடலைப்பருப்பு -1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
செய்முறை
முதலில் சுண்டக்காயை தண்ணீரில் கழுவி, அதை இரு துண்டுகளாக வெட்டிக் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் துண்டுகளாக்கப்பட்ட சுண்டக்காயை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வரமிளகாய், புளி, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதன் பின்பு அதில் கல் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அதற்கிடையில் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியில் தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் சுண்டக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |