கடும் சர்ச்சையை கிளப்பிய ராஜராஜ சோழன் விவகாரம்! இயக்குநர் பா. ரஞ்சித் மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி கருத்து
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 31-ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ‘ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது’ என தெரிவித்தார். மேலும் பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்தும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.