தித்திப்பான அவல் குலாப் ஜாமூன்!
அவலில் சிச்சடி, உப்புமா, லட்டு என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவல் - ஒரு கப்
- சர்க்கரை - ஒரு கப்
- குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
- வெதுவெதுப்பான பால் - மாவு பிசையத் தேவையான அளவு
- சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப் (உதிர்த்துக்கொள்ளவும்)
- ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
- பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 15 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை
வெறும் வாணலியில் அவலை வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி சர்க்கரைப் பாகை ஆறவிடவும்.
அதில் குங்குமப்பூ சேர்க்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் அவல் மாவு, சர்க்கரை இல்லாத கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, பால் தெளித்து மிருதுவாகப் பிசையவும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து அதன் நடுவே பாதி பேரீச்சை வைத்து மூடி உருட்டிக்கொள்ளவும். இப்படி எல்லா உருண்டைகளையும் செய்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் - கோவா உருண்டைகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.
அரை மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும்.
சூப்பரான அவல் குலாப் ஜாமூன் ரெடி.