10 நிமிடத்தில் சுவையான பூண்டு மிளகு சாதம்- செய்வது எப்படி?
சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் பூண்டு, மிளகு சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அந்த வகையில் 10 நிமிடத்தில பூண்டு மிளகு சாதம் எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சாதம் - ஒரு கப்
- கடுகு - அரை டீஸ்பூன்
- உளுந்து - அரை டீஸ்பூன்
- கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- வெங்காயம் - ஒன்று
- பூண்டு - 10 பல்
- மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லித்தழை- சிறிதளவு
- நெய், உப்பு - தேவைக்கு
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து, வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன் பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இந்த நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும். சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி.....