இனி வெளிநாட்டு பயணிகளுக்கும் அனுமதி! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவியதை அடுத்து, பல நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மெல்ல மெல்ல தளர்வுகளை தளர்த்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்ததால், போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
முழுமையாக தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது நவம்பர் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “நவம்பர் 8ஆம் தேதி முதல் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அறிவிப்பானது சர்வதேச விமானப் பயணம் மற்றும் தரைவழி பயணம் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்” என தெரிவித்து இருக்கிறார்.