கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்டுள்ள சடலங்கள்! கொரோனாவால் இறந்தவர்களா? கிராமத்தினர் அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தில் கங்கை நதிக்கரைகளில் மீண்டும் சில சடலங்கள் ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் பல சடலங்கள் மிதந்து வருவது கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சடலங்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அடித்து வரப்பட்டவை என பீகார் அரசு தெரிவித்தது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதி அருகே பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பெரும்பாலான சடலங்கள் காவி உடையில் மூடப்பட்டுள்ளது தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட இடம் முக்கியமான தகன ஸ்தலம். புதைக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா நோயாளிகள் என உறுதியாகவில்லை.
ஆற்றுக்கு அருகே தகனம் செய்யாமல் சிலர் புதைத்துவிடுகின்றனர். சம்பந்தப்பட்ட இடத்துக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தகனம் செய்ய தேவையான மரக் கட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.