மீன் குழம்பு வைத்த மனைவி: கணவர் கேட்ட கேள்வி! இருவரும் உயிரிழந்த சோகம்
மீன் குழம்பு வைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் மனைவி இறந்துவிட்டதாக நினைத்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் எல்லையம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் குமார்(40), பெயின்டராக இருக்கும் இவர் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்.
இவரது மனைவி துர்கா(36). இவர்களுக்கு மோகன்(17), ஜீவா(15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குமார், வேலை முடிந்து போதையில் வீட்டுக்கு வந்தார். துர்கா வீட்டில் மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தார்.
இதனை பார்த்து குமார், ஆடிக்கிருத்திகைக்கு மீன்குழம்பு ஏன் செய்தாய் என கேட்டு துர்காவிடம் தகராறு செய்ததோடு, அவரை ஆத்திரத்தில் இரும்பு ராடால் தாங்கியதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார் துர்கா.
மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த மனைவியை அவதானித்து இறந்துவிட்டதாக நினைத்த குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய மகன்கள் வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் தாயும், தூக்கில் தந்தையும் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்பு தகவல் அறிந்த பொலிசார், துர்காவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலைியல் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்ததாக நினைத்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மனைவியும் இறந்துவிட்டார். இதனால், இரண்டு மகன்களும் அனாதையாக தவிக்கின்றனர்.