முதல் முறை டாட்டூ போட போறீங்களா? இதையெல்லாம் கவனத்தில் வைத்துகொள்ளுங்கள்!
டாட்டூ எனப்படும் பச்சை குத்துவது என்பது இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இருக்கும் இதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை.
டாட்டூ குத்தும் கடைகள் வித விதமாக பெயரை எழுதுவதும் முதுகு, கால், என பெரிய அளவில் பிடித்த உருவங்களை வரைவது வரை என இளைஞர்களை கவர்வது தான்.
ஆரம்பத்தில் தமிழத்தில் பச்சை குத்தும் வழக்கம் முற்றிலும் இயற்கையானது. மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து நன்கு அரைத்து, ஒரு துணியில் கட்டி, பின் காயவைத்து எரித்துக் கரியாக்குவார்கள்.
அதன் பின் அதில் தண்ணீர் கலந்து பசையாக்கி, கூர்மையான ஊசியால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்தி உருவங்களை வடிவமைப்பர். பின் பச்சை குத்திய பின் அந்த இடத்தை வெந்நீரால் கழுவி சுத்தம் செய்தால் இந்த இடம் பச்சை நிறத்தில் அழகாகத் தோற்றமளிக்கும்.
இது எப்போதும் அழியாமல் இருக்கும். பக்கவிளைவுகள் பெரிய அளவில் இருக்காது. ஆனால், நவீன டாட்டூ கடைகளில் கரித்துண்டு, மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை, பச்சை நிறத்தில் டாட்டூ தீட்டுகிறார்கள். அதேப்போன்று, மெர்க்குரி, அயர்ன் ஆக்சைடு, குரோமைட், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் போன்ற ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன.
நிக்கல், குரோமைட் போன்ற உலோக அலர்ஜி உள்ளவர்கள் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டாம்.
முக்கியமானவை
முதலில் உங்களுக்கு டாட்டூ அவசியமா என தீர்மானிக்கவும். ஏன் என்றால் அதை அழிப்பது மிகவும் கடினம்.
அடுத்து, டாட்டூ போடும் ஒரு வாரத்திற்கு முன்பே நிறைய தண்ணீர் குடிக்க ஆரம்பியுங்கள். குறைந்தது தினமும் 2.5 லிட்டர் தண்ணீராவது குடிப்பது மிகவும் அவசியம்.
அதிகம் தண்ணீர் குடிப்பதால், சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனைத்தொடர்ந்து, டாட்டூ போடுவதற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள சருமத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதே மாதிரி டாட்டூ போடுவதற்கு பயன்படுத்தும் ஊசிகளை கவனிக்க வேண்டும். ஏனெனில் சில சமயம் டாட்டூ ஊசிகள் மூலமாக தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளது.
மேலும், டாட்டூ குத்தப்போகுபவர் புதிய ஊசியைத் தான் பயன்படுத்துகிறாரா? என்பதை உறுதி செய்யுங்கள். வேறு யாருக்காவது பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் வைரஸ் தொற்றுக்களை உண்டாக வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு
அடுத்து முக்கியமாக டாட்டூ போடப்பட்ட பிறகு அந்த பகுதில் கட்டு போட்டு பாதுகாப்பாக மூட வேண்டும். மேலும் உங்கள் கைகளை கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இது பாக்டீரியா தொற்றை தடுக்க உதவும். அதேபோல் புதிதாக போடப்பட்ட டாட்டூவை வெது வெதுப்பான நீரில் கழுவி, டவல் கொண்டு லேசாக துடைக்க வேண்டும்.
தொடர்ந்து, டாட்டூ போட்ட உடன் அந்த இடத்தில் சிறிது வலி இருக்கும், அரிப்பு கூட ஏற்படலாம். அழுக்கான கைகளால் தொடும் பட்சத்தில் தொற்று உண்டாகக்கூடும். அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அரிப்பை தடுக்கவும், உங்க சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும் பெட்ரோலியம் ஜெல்லியை டாட்டூ போட்ட இடத்தில் தேய்க்கலாம். இது சருமத்தில் இருக்கும் பாதிப்புகளை குணப்படுத்தும்.
மேலும் பக்க விளைவு ஏற்படுத்தாது. தோல் வறண்டு ஏற்படும் பிரச்னைகளும் தவிர்க்கப்படும். எனவே டாட்டூவின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டு டாட்டூவை போடுவதே சிறந்தது.