நடுவானில் பறந்த விமானத்தின் போது பெண் பயணிக்கு ஏற்பட்ட துயரம்; தரையிரங்கிய பின் ஏற்பட்ட சோகம்!
நடுவானில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை விமான நிலைத்து விமானம் ஒன்று வந்தது. அதில் இதய நோயாளியான டாக்காவைச் சோ்ந்த சலினாபேகம் என்ற 53 வயது பெண் சிகிச்சைக்காக தனது மகன், மகள் ஆகியோருடன் சென்னைக்கு வந்துள்ளார்.
அப்போது விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சலினாபேகத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் வலியால் துடிப்பதை கண்ட விமான பணிப்பெண்கள், இதுபற்றி விமானிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அந்த விமானம், நேற்று பிற்பகல், 3:15 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது. அப்போது தயாராக இருந்த மருத்துவ குழுவினர், சலினா பேகத்தை விமானத்திற்குள் சென்று பரிசோதித்தனர். ஆனால் அவா் இருக்கையில் சாய்ந்தபடி உயிரிழந்து இருந்தாா். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, விமான நிலைய போலீசாா், சலினாபேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.