வெள்ளத்தில் உயிரைக் காப்பாற்ற தந்தை மகன் நடத்திய போராட்டம்: கேரளா புயலின் கோரத்தாண்டவ கண்ணீர் காட்சி
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் பேருந்தின் சக்கரத்தை பிடித்து தொங்கியபடி காணப்பட்ட காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு உட்பட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று காணொளியாக வைரலாகி வருகின்றது.
இடுக்கி மாவட்டத்தில் புல்லுபாரா என்ற இடத்தில் பேருந்து ஒன்று செல்லும் போது கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்தில் இருந்த நடத்தினர் புரண்டு ஓடிய வெள்ள நீரை படம் பிடித்துக் கொண்டிருக்கையில், குறித்த அரசு பேருந்தின் சக்கரத்தை ஒருகையினாலும், மற்றொரு கையில் மகனை பிடித்தவாறு இருவரும் உயிருக்கு போராடியதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சக பயணிகளின் உதவியுடன் குறித்த சிறுவனையும் அவரது தந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்கள் குஜராத் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வெள்ளம் அதிகமாக இருந்ததால் காருக்குள் இருந்த மனைவி, மகன், மற்றும் கணவர் மூவரும் வெளியே இறங்கியவேளை கணவரும், மகனும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டதையடுத்து, அங்கிருந்த வாகன ஓட்டிகளின் உதவியுடன் அவரது மனைவியையும் காப்பாற்றியுள்ளனர்.