மைதானத்துக்குள் புகுந்து பந்தை கவ்விய நாய்: ஆட்டம் நிறுத்தம்! பின்பு நடந்தது என்ன?
கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாய் ஒன்று உள்ளே புகுந்து பந்தை கவ்விச் சென்றுள்ள சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
பெல்பாஸ்ட் நகரில் அயர்லாந்து உள்நாட்டு மகளிர் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. பிரடி மற்றும் சிஎஸ்என்ஐ அணிகளுக்கு இடையிலான அரையிறுதிஆட்டம் நேற்று நடந்துள்ளது.
21 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இக்கட்டான கட்டத்தில் சிஎஸ்என்எல் அணி இருந்த நிலையில், 9 வது ஓவரை பிரெடி அணி பந்துவீச்சாளர் வீசினார், வீராங்கனை அபி லெக்கி பேட்டிங் செய்தார். 3-வது பந்தை வீசியபோது அபி லெக்கி பந்தை தேர்டு மேன் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார்.
தேர்டுமேன் திசையில் இருந்த பீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ராச்செல் ஹெப்பர்னிடம் வீசினார். அப்போது பார்வையாளர் மாடத்திலிருந்து ஒரு நாய் மைதானத்துக்குள் புகுந்தது. பந்தைப் பிடித்து விக்கெட் கீப்பர் ஹெப்பர்ன் ஸ்டெம்பில் அடிக்க முயன்றபோது பந்து தவறியது.
இதைப் பார்த்த அந்த நாய் பந்தைக் கவ்விக் கொண்டு மீண்டும் பார்வையாளர் மாடத்தை நோக்கி ஓடியதால், அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர்.
பின்பு நாயிடமிருந்து பந்தை வாங்கி, வீராங்கனை ஒருவர் நாயை உரிமையாளரிடம் வழங்கிவிட்டு திரும்பினார். நாய் பந்தை எடுத்து ஓட்டம் பிடித்த சம்பவத்தால் சிலநிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.