அப்பளத்தினால் ஏற்பட்ட பிரச்சினை! கலேபரமாக மாறிய திருமண நிகழ்வு
கேரளாவில் திருமணம் ஒன்றில் அப்பளத்திற்கு ஏற்பட்ட சண்டையால் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
திருமணம்
பொதுவாக திருமணங்களில் பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படுவது உண்டு. கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்தில் கூடுதலாக அப்பளம் வைக்கவில்லை எனக்கூறி தகராறு நடந்திருக்கிறது. இது அந்த பகுதி மக்களை திகைக்க வைத்திருக்கிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள முட்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், திருக்குன்றப்புழாவைச் சேர்ந்த இளைஞருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து முட்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது திருமணம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் இருவீட்டார் மற்றும் மணமகனின் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த நிலையில், விருந்து நடைபெற்றிருக்கிறது.

அப்பளம்
விருந்தின் போது மணமகனின் நண்பர் ஒருவர் கூடுதலாக அப்பளம் கேட்ட நிலையில், உணவு பரிமாறுபவர் கொடுக்க மறுத்துள்ளாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறி அங்கிருந்த பொருட்களை உடைக்க ஆரம்பித்துள்ளனர்.
மண்டப உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், 15 பேரை கைது செய்துள்ளதுடன், 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.