நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்க: தனுஷை சரமாரியாக பேசிய நீதிபதி
நடிகர் தனுஷ் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் ஒன்றினை இறக்குமதி செய்த நிலையில், இதற்கு நுழைவு வரியாக 60.66 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று வணிகத்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் 30 லட்சம் மட்டும் வரி செலுத்திவிட்டு, நீதிமன்றத்தில் வரிவிலக்கு கோரி வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தனுஷ் தரப்பு ஆஜராகாமல் இருந்ததால் இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே வரித்தொகையில் பாதியைச் செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள தொகையையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை முடித்து வைக்குமாறும் கூறினார்.
இதற்கு நீதிபதி, ``இத்தனை ஆண்டுகள் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்போது எல்லாம் வழக்கை திரும்பப்பெறவேண்டும் என்று முடிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் நீங்கள் வழக்கை முடித்துக் கொள்ள நீங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இந்த வழக்கை இழுத்தடிக்க நினைப்பதின் நோக்கம் என்ன?" என்றார். தொடர்ந்து ``நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமென்றாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``வழக்கறிஞர் தான் உங்களின் தரப்பினருக்கு எடுத்துக் கூறவேண்டும். அதேபோல, மனுதாரர் தான் என்ன வேலை பார்க்கிறார் என்பதையும் மனுவில் குறிப்பிடவில்லை. ஒரு உயர்தர சொகுசு கார் வாங்கும் மனுதாரரால் தான் என்ன வேலையில் இருக்கிறோம், என்ன தொழில் செய்கிறோம் என்பதைக் குறிப்பிட முடியாதா? அதை ஏன் மறைத்தார் என்பது குறித்து ஒரு மனுத் தாக்கல் செய்யவேண்டும். தனுஷ் செலுத்தவேண்டிய வரிப் பாக்கி எவ்வளவு என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த தொகை என்ன என்பது தெரிந்த பின்னர் தான் என்றைக்குள் செலுத்தவேண்டும் என்பது தெரியவரும். நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டிருந்த வழக்கையும் விசாரித்தது உத்தரவு பிறப்பித்தது இதே உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.