இந்தியாவில் புதுசா கிளம்பி இருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ்.. அடுத்தடுத்து 40 பேர் பாதிப்பு!
உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.
இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டுள்ளது என தெரிகிறது. மேலும், இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
இதனிடையே, இந்தியாவில் கோவிட்-19-ன் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் 40 ஆக உள்ளது. தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பரவியுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
மேலும், இது குறித்து இப்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.