தமிழகத்திலும் பரவிய டெல்டா பிளஸ் வைரஸ்- நர்சுக்கு பாதிப்பு!
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து, திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் டெல்டா ப்ளஸ் வகை பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இரண்டே வாரத்தில் 2 மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.
இதனிடையே, கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது. 5 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட 4 பேர் நலமுடன் உள்ளனர்.
ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்ட 1,159 ஆய்வுகளில் 554 ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் சென்னையை சேர்ந்த நர்சு ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
தற்போது அவர் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு பரவியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.