மகனின் பயிற்சியில் 82% மதிப்பெண்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த மாற்றுத்திறனாளி தாய்!
ஸ்ரீநகர்: விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 45 வயது மாற்றுத்திறனாளி பெண்.
வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத ரேணு ஹன்ஸ், தனது மகனின் உதவியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

22 ஆண்டு கனவு
ஜம்மு-காஷ்மீரின் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹன்ஸ். பிறவியிலேயே வாய் பேசும் மற்றும் காது கேட்கும் திறனை இழந்த அவர், திருமணத்திற்கு முன்பே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்தத் தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதன்பிறகு திருமணம், குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கை நகர்ந்ததால், அவரது கல்விப் பயணம் பாதியிலேயே நின்றுவிட்டது.
இருந்தபோதிலும், பள்ளிப் படிப்பை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற ஆசையை மட்டும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை.22 ஆண்டுகளாக மனதில் சுமந்த அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பு இறுதியில் அவரது மகன் மூலம் கிடைத்தது.

தாய்க்கு ஆசிரியரான மகன்
ரேணுவின் நீண்ட நாள் ஆசையை அறிந்த அவரது ஒரே மகன் நமன் கவுல், தாயின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு தானே ஆசிரியராக மாறினார். தற்போது பிளஸ்-2 படித்து வரும் நமன், சிறு வயது முதலே தனது தாயுடன் சைகை மொழியில் உரையாடி வருகிறார்.
தனது படிப்புக்கு இடையிலும், தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தாய்க்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினார். பாடங்களை சைகை மொழி மூலம் விளக்கியதுடன், தாயின் சந்தேகங்களையும் பொறுமையாகத் தீர்த்து வைத்து, தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு ரேணுவை முழுமையாகத் தயார்படுத்தியுள்ளார்.

500-க்கு 406 மதிப்பெண்கள்!
ரேணு ஹன்ஸ் ஜம்மு-காஷ்மீர் மாநில வாரியத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில், 500-க்கு 406 மதிப்பெண்கள் பெற்று 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேர்வு மையத்திற்குச் சென்றபோது, தன்னைவிட மிகவும் குறைந்த வயதுடைய மாணவ-மாணவிகளைப் பார்த்து ஆரம்பத்தில் சற்று பயந்ததாக ரேணு தெரிவித்துள்ளார். ஆனால், தனது மகன் அளித்த ஊக்கமும் நம்பிக்கையும் தனக்கு தைரியத்தை அளித்ததாகவும், அதன் பின்னர் நம்பிக்கையுடன் தேர்வை எழுதியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனையே குருவாக ஏற்று 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள ரேணு ஹன்ஸின் சாதனை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், இந்த இமய சாதனைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |