ஆட்டோ ஓட்டுனரின் மகள் இந்திய அழகியானது எப்படி? முகம் சரியில்லை என்று பலமுறை ஒதுக்கப்பட்ட சோகம்
பெமினா நடத்திய மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக வந்தவர் தான் மான்யா சிங். இந்த போட்டியில் வெற்றிபெற்ற அழகியை விட மான்யா தான் தற்போது அதிகம் பேசப்படும் நபராக இருந்து வருகின்றார். ஆம் மான்யா அவர் ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனரின் மகள் என்பதுதான்.இந்த இடத்தை அடைய நான் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறேன் தெரியுமா? என் தந்தை ஆட்டோ ஓட்டுபவர் என்பதை சொல்வதில் எனக்கு பெருமைதான், ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகள் அழகியாக வரக்கூடாதா? என்கிறார் மான்யா சிங்.
இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் அனைவருக்கும் உலக அழகியாக விருப்பம் இருக்கத்தான் செய்யும். காரணம் ஒரு முறை உலக அழகி பட்டம் பெற்றுவிட்டால் கிடைக்கும் பாராட்டுகளும் பரிசுகளும் மிக அதிகம்.இதற்கு முதலில் இந்திய அழகியாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் இந்திய அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டாலே நிறயை பரிசும் பராட்டும் கிடைக்கும். இதற்கான முயற்சிக்கும் பயிற்சிக்கும் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் உயர் வகுப்பு பெண்கள்தான் இதில் ஆர்வம் காட்டுவர்.
முதல் முறையாக சாதாரண குடும்பத்தில் அதுவும் ஆட்டோ ஓட்டுபவர் குடும்பத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். உத்திர பிரதேசத்தில் குட்ஷி என்ற கிராமத்தைச் சார்ந்த ஒம்பிரகாஷ்சின் மகள் தான் மான்யா. மான்யாவிற்கு சிறு வயது முதலே அழகு, ஆடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதற்கு தன் தந்தையின் வருமானம் இடம் தராது என்பதால் தனக்கான தேடுதலுக்கு விடை பெறவேண்டி ஊரைவிட்டு கிளம்பி தன்னம்பிக்கையுடன் மும்பை வந்துவிட்டார்.
ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தவருக்கு பசி எதிரே தெரிந்த பீட்சா கடையில் போய் வயிறார சாப்பிட்டிருக்கிறார்.சாப்பிட்டதற்கு காசு கேட்ட போது என்னிடம் பணம் இல்லை வேலை இருந்தால் கொடுங்கள் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த கடை முதலாளி நல்லவர் வேலையும் கொடுத்து தங்குவதற்கு இடமும் கொடுத்துள்ளார்.
இரண்டு நாள் கழித்து மான்யா பெற்றோருக்கு போன் செய்து தான் மும்பையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மகளைக் காணாமல் தவித்துப் போன தந்தை உடனே மகளின் விருப்பத்திற்கு செயல்படுவதற்கு குடும்பத்துடன் மும்பை கிளம்பியுள்ளார். கையில் இருந்த பணத்தை வைத்து மகளுக்காக ஆட்டோ ஓட்ட தொடங்கினார். அழகிப் போட்டிக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் உன் முகம் சரியில்லை மேலும் உனக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்லி பல முறை இவரை நிராகரித்தனர்.
இதனால் துவண்டு விடாத மான்யா தனது உடல், முகம், ஆடை விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கூடவே ஆங்கிலம் கற்கவும் ஆரம்பித்தார். எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்பட்டது. இதற்கு பீட்சா கடையில் ஒவர் டைம் மற்றும் விடுமுறை நாட்களிலும் வேலை பார்த்து பணத்தை மிச்சப்படுத்தி அழகு நிலையங்களுக்கு சென்று தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்துள்ளார்.
பத்தாவது முறையாக தனது 19 வயதில் நினைத்ததை சாதித்துவிட்டார். வின்னர் மட்டுமல்ல ரன்னராக வந்தாலும் உலக அழகிப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதால் மிகவும் மகிழ்ந்து போயுள்ளார். எந்த முகம் சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டதோ அந்த முகம்தான் எங்களது பொருளை விற்க மாடலாக வேண்டும் என்று விளம்பர நிறுவனங்கள் பணப்பெட்டியுடன் இவரது சம்மதத்திற்காக காத்திருக்கின்றன.
எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று புறந்தள்ளிவிட்டு தனது வெற்றியை தாய் தந்தைக்கு சமர்ப்பித்த மான்யா அப்பாவின் ஆட்டோவில் ஏறி நம்பிக்கை நாயகியாக வலம் வருகின்றார்.