கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க
பொதுவாகவே நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை முக்கிய இடம் பிடித்துவிடும் .நம்மில் பலரும் சமையலில் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை தான் கறிவேப்பிலை என்று கருதுகிறோம்.ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதனை பச்சையாக தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் அடத்தியாகவும் வளர ஆரம்பிக்கும். கறிவேப்பிலையின் நன்மைகளை முழுடையாக பெற்றுக்கொள்ளும் வகையில் நாவூரும் சுவையில் எவ்வாறு கறிவேப்பிலை சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
புளி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
துருவிய தேங்காய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, அதில் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள், புளியை சேர்த்து நன்றாக வத்கிஎடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கி இறக்கி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது தண்ணீ்ர் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை மற்றும் 1 வரமிளகாயை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |