த்ரில்லர் வெற்றியுடன்… IPL 2021 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே! ரசிகர்கள் கொண்டாட்டம்
ஐபில் 2021 போட்டியில், இன்றைய பரபரப்பான ‘கடைசி ஓவர்’ த்ரில்லர் ஆட்டத்தில், டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
14-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 1 துபாயில் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் மோதின.
டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021
முதல் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ரன்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ரன்களை விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். சிஎஸ்கே அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் சிஎஸ்கே சிங்கமென களமிறங்கியது. டூ-பிளசி ஒரு ரன்னில் அவுட்டாகி சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா மிக அருமையாக விளையாடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஷர்துல் தாக்குர் ரன் எதுவும் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் எப்போதும் போன்று நிலைத்து நின்று விளையாடி 70 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
கடைசியில், சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வின்னிங் ஷாட்டாக, கடைசி ஓவரின் நான்காவது பந்தில், ஒரு பவுண்டரி அடித்து, தான் என்றுமே ஒரு பெஸ்ட் ஃபினிஷர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார், சிஎஸ்கே அணியின் கேப்டன் ‘தல’ தோனி!
இந்நிலையில் விராட் கோலி தம் ட்விட்டர் பக்கத்தில், ‘கிங் ஈஸ் பேக்’ என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.