தோனி படைத்த புதிய சாதனை - வெற்றிக்கு பின் நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை ருசித்தது,. 4-வது முறையாக கேப்டன் தோனியின் தலைமையில் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து, ஐ.பி.எல். 2021 இறுதிப்போட்டியில் விளையாடியதின் மூலம் தோனி இருபது ஓவர் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதனிடையே, 2021 ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதனை அணியின் சார்பில் கேப்டன் தோனி பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் பேசிய தோனி, சென்னை அணி பற்றி பேசுவதற்கு முன், கொல்கத்தா அணியைப் பற்றி பேச வேண்டும். இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த அணி என்றால் அது கொல்கத்தா தான். அவர்களது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார்.
அதன்பின்னர், தோனியிடம் அவரது எதிர்கால திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 2 புதிய அணிகள் வர உள்ள நிலையில், பி.சி.சி.ஐ. எடுக்கும் முடிவை பொறுத்து எனது எதிர்கால திட்டம் அமையும் என்று பதிலளித்தார்.
மேலும், சென்னை அணியுடன் அவரது எதிர்கால தொடர்பு எவ்வாறு இருக்கும் என தோனியிடம் கேட்ட போது, சென்னை அணிக்காக நான் விளையாடுவது என்பதை விட, சென்னை அணிக்கு எது சிறந்தது என்பதை தான் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய போது, “நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் கேப்டன் தோனி.