இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த கொரோனா எண்ணிக்கை.. தமிழகத்தில் ஒரே நாளில் 8000 பேர் பாதிப்பு!
இந்தியாவில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதே தினசரி தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7000-க்கு நெருக்கமாக இருந்தது.
தற்போது, 8000 என்பது மிகச் சாதாரணமாக வருகிறது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்த நிலையிலும், பாதிப்பு குறையவில்லை.
இதனால், மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும், இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது. இந்நிலையில், கூடுதல் கட்டுப்பாடு தேவையா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.