பிக்பாஸ் நடிகைக்கு கொரோனா: படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் பரபரப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகை மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் கவுஹர் கான். தற்போது படங்களில் நடித்து வரும் இவர் மும்பையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கவுஹர் கானுக்கு அறிவுறுத்தினர்.
ஆனால் நடிகை கவுஹர் கான், அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதையடுத்து கொரோனா தடுப்பு விதிகளை மீறிய நடிகை கவுஹர் கான் மீது ஓஷிவாரா காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.